அரசியல் வாரிசு என கருணாநிதி அறிவித்தது குறித்து கருத்து எதுவும் இல்லை: மு.க.ஸ்டாலின்
சென்னை: தம்மை அரசியல் வாரிசு என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தது குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கில்லை என அக்கட்சியின் பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருணாநிதி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இளைய மகன் மு.க.ஸ்டாலின்தான் தம்முடைய அரசியல் வாரிசு; மூத்த மகன் அழகிரியைப் பற்றி கவலைப்படவில்லை என கூறியிருந்தார். இந்த அறிவிப்பை திமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அது குறித்து கருத்து எதுவும் இல்லை என்ற பதிலையே மீண்டும் மீண்டும் ஸ்டாலின் கூறினார்.
மேலும், 3 தொகுதிகளுக்கான தேர்தல் நியாயமாக நடைபெற்றால் திமுகதான் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் அதிமுக அரசு முன்பைவிட மோசமாக இருக்கிறது எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
3 தொகுதிகளுக்கான பிரசாரம் குறித்து கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகனுடன் ஆலோசித்து வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.