ஜெ. உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் இறுதி மரியாதை- தம் பொறுப்புகளை திறம்பட செய்தவர் என புகழஞ்சலி!
ஜெயலலிதா உடலுக்கு முக ஸ்டாலின் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதே அங்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்தும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தமது கவலையை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று காலமானார். அவரது உடல் இன்று அதிகாலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் இன்று ராஜாஜி ஹாலுக்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக நிர்வாகிகள் ஐ பெரியசாமி, எவ வேலு, பொன்முடி உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை வேதனையை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்துவாடும் அதிமுகவைச் சேர்ந்த தோழர்களுக்கு தொண்டர்களுக்கு நிர்வாகிகளுக்கு தமிழக மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை திமுக சார்பிலும் கருணாநிதி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எந்த பொறுப்பை ஏற்றாலும் தொடக்கத்தில் சத்துணவிலேயே குழுவின் உறுப்பினராக, தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராக, அதிமுக பொதுச்செயலராக தமிழக முதல்வராக இப்படி பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றியவர் ஜெயலலிதா.
ஒவ்வொரு நிலையிலும் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய சிறப்புக்குரிய ஒன்றாகும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நான் துணை முதல்வராக பணியாற்றி இருக்கிறேன்.
அண்மையில் அவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரான போது நான் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து அதை நிறைவேற்றுவதில் தொடர்ந்து அழுத்தமாக உழைத்திருக்கிறார்.

அதற்காக நாம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். அவரை இழந்து இன்று தமிழகம், அவரது கட்சியை சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு வேதனையில் இருப்பார்கள் என்பது தெரியும். இதில் திமுகவும் பங்கேற்று அந்த வேதனையில் பங்கேற்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினேன் #RIP pic.twitter.com/vt17ycHVpc
— M.K.Stalin (@mkstalin) December 6, 2016












Click it and Unblock the Notifications