நான் இன்றுதான் பிறந்துள்ளேன்... பொதுக் குழுவில் ஸ்டாலின் எழுச்சி உரை
Recommended Video
சென்னை: நான் இன்றுதான் பிறந்துள்ளேன் என்று பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவர் பதவிக்கு தேர்வான ஸ்டாலின் பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் நான் ஒரு கனவு கண்டுள்ளேன்.
இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும் மு.க.ஸ்டாலினாக நான் புதிதாக பிறக்கிறேன், இது வேறு ஒரு நான். திராவிட மரபணுவுடன், கனவுகளை நிறைவேற்ற நான் புதிதாக பிறந்துள்ளேன். என்னோடு பிறந்துள்ள கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்.
எனது கனவுகள்
இது புதிய நாம்.. அந்த அழகான எதிர்காலத்தில் கழகத்தினர் உள்ளனர். தன் ஜாதியை பெரிதாக நினைப்போர் அல்ல, அனைவரையும் உடன்பிறப்பாக நினைப்போர். பகுத்தறிவு எனும் அறிவு கொண்டு, ஆணும் பெண்ணும் இங்கு சமம் என்று மதித்தல், திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கு சம உரிமை பெற்று கொடுத்தல், ஊடகங்கள் மற்றும் தனிமனித கருத்து சுதந்திரத்தை மீட்பது, பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதசாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல் ஆகியனதான் எனது கனவுகள் என்றார்.
தமிழகத்தின் கனவு
இந்த நொடி முதல் மெய்ப்பிக்க போகிறது. இந்த கனவுகளை நிறைவேற்ற துடித்துக் கொண்டுள்ளேன், நீங்கள் இல்லாமல் இந்த பெருங்கனவை நிறைவேற்ற முடியாது. இது எனது கனவு மட்டுமல்ல, தமிழகத்தின் கனவு, வா, என்னோடு கைகோர்க்க வா.
மெய்ப்பிப்போம்
வா.. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பு இல்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா. அழகான எதிர்காலத்தை மெய்ப்பிப்போம், நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று அழைக்கிறேன்.
சுயநல போக்கு
இனி நீங்கள்தான் எனது குடும்பம். கட்சி நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தலைமைக்கு அனைவரும் ஒன்றுதான். திமுகவில் நானும் ஒரு தொண்டன்தான், இங்கே அனைவரும் ஒன்றுதான். யார் பெரியவர் என்ற சுயநல போக்குடன் இருக்க கூடாது.
தமிழக நலன்
கழக தோழர்களே, இது காலத்தின் பேரழைப்பு. இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல, தீயை தாண்டுவதற்கு. ஓடுவோம், ஓடுவோம், வாழ்க்கை நெறிமுறைகளின் ஓரத்திற்கே ஓடுவோம். நமது சொந்த நலன்களை மறந்து தமிழக நலனுக்காக உழைப்போம்.
எழுச்சி உரை
பெரியார் கற்றுத்தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. கருணாநிதி இல்லாத மேடையை கனவில் கூட நாம் கண்டது கிடையாது. 50 ஆண்டுகால வரலாற்றை எனது சிறு இதயத்திடம் தந்துவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார். எனது இதயம் அவர் தந்தது, அது அண்ணாவிடம் இரவலாக வாங்கியது. எனது இறுதி இதய துடிப்பு இருக்கும்வரை, இறுதி மூச்சு இருக்கும்வரை உனக்காக போராடுவேன் என்று கண் கலங்கியபடி பேசிய ஸ்டாலின் நெகிழ்ச்சியாகவும் எழுச்சியாகவும் உரையை முடித்தார்.