ஜெயலலிதா இறந்ததும் நான் நினைத்திருந்தால்.. அது நடந்திருக்கும்.. நாகர்கோவிலில் ஸ்டாலின்!
நாகர்கோவில்: ஜெயலலிதா இறந்ததும் திமுக ஆட்சி அமைக்க அதிமுகவில் இருந்து சிலர் தூதுவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தை கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களின் குறைகளை கேட்க அவர் நாகர்கோவில் வந்தார்.
ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் ஆயிரக்கணக்கானோர் மனு கொடுத்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், உங்கள் மாவட்டம்தான் இந்தியாவின் மகத்தான அடையாளமாக சொல்லப்படுகிறது.
தென்குமரி
வடக்கே இமயமும் தெற்கே குமரியும் அடையாளமாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட முக்கடலில் தமிழ் ஆசான் வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்து, அதை தமிழ் கடலாக மாற்றியவர் கருணாநிதி. இந்தியாவில் ஒரு சுதந்திர போராட்டம் நடந்த போது தென்குமரியில் இரு போராட்டங்கள் நடந்தன.
சலுகை
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவற்றில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க பல தியாகிகள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள். எல்லை தியாகிகளுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சலுகை வழங்கியவர் கருணாநிதி.
கருணாநிதி
கருணாநிதியும், அண்ணாவும் தமிழகத்துக்காக, தமிழ் இனத்துக்காக, தமிழர்களுக்காக ஆட்சியை நடத்தினார்கள். இத்தைகைய ஆட்சி தான் விரைவில் அமைய இருக்கிறது. சிலர் அமைச்சர்கள் ஆக வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வர நினைக்கும் கட்சி அல்ல தி.மு.க. நானோ மற்றவர்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல. என்பதை தொண்டர்களும் தமிழக மக்களும் அறிவார்கள்.
ஜெயலலிதா சட்டம்
2002ல் எனக்காக ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். சென்னை மேயர் பதவி, எம்.எல்.ஏ பதவியில் இருந்ததால் ஒருவர் இரண்டு பதவியில் இருக்கக்கூடாது என தனிச்சட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதை நான் எதிர்க்கவில்லை. உடனே நான் மேயர் பதவியை விட்டு விலகினேன். மக்களுக்கு சேவை ஆற்றதான் பதவியே தவிர, எனது தனிப்பட்ட உயர்வுக்காக பதவி அல்ல.
குழப்பம்
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி திமுக ஆட்சி அமைக்கும் என்றார்கள். அ.தி.மு.கவில் இருந்தும் சிலர் தூது விட்டார்கள். அவர்களைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. அப்படி ஆட்சி அமைத்தால் அது தி.மு.க அரசாக இருக்காது.
பாதி அதிமுக பாதி பாஜக
கோடிகணக்கான மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது விரைவில் அமைய உள்ளது. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைய உள்ளது. இன்று நடப்பது பாதி அ.தி.மு.க, பாதி பாஜக ஆட்சி. எல்லாவற்றையும் அரைகுறையாக செய்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி மரணத்தின்பொது அண்ணா அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காதவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.