திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
திருமண விழாக்களில் தம்மை புகழ்ந்து பேச மு.க.ஸ்டாலின் தடை விதித்துள்ளார்.
சென்னை: திருமண விழாக்களில் தம்மை புகழ்ந்து பேச வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவின் செயல் தலைவரான பின்னர் ஸ்டாலின் தமது காலில் யாரும் விழ வேண்டாம் என அறிவுறுத்தினார். அதேபோல் பேனர்களை வைக்காமல் திமுக கொடியை நட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழா இன்று பழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், இந்த திருமணத்தை சென்னையில் நடத்தாமல் பழனியில் நடத்தியதற்காக நான் வாகை சந்திரசேகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் சென்னையில் நடத்தி இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டி இருக்கும்.
அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் சென்னையில் நடத்தாமல் பழனியில் அவர் நடத்தி இருக்கிறார். கருணாநிதி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தை அவரிடம் நான் வழங்கியுள்ளேன். திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் மணமக்களை மட்டும் வாழ்த்தி பேசுமாறு தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறினேன் என்றார்.
ஸ்டாலினின் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.