நல்லா "டைம் பாஸ்" ஆகும்.. வைகோ கூட்டணி குறித்து கிண்டலடித்த நாஞ்சில் சம்பத்
நாகர்கோவில்: மதிமுக தலைமையிலான மக்கள் நல கூட்டணியால் யாருக்கும், எந்தப் பாதிப்பும் கிடையாது. மாறாக, அவர்களுக்கு நன்றாக பொழுதுபோகும் என்று கிண்டலடித்துள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை ஆகியவை இணைந்து புதிதாக மக்கள் நல கூட்டணி என்ற அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டணி குறித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், மக்கள் நல கூட்டு இயக்கம் கரை சேர முடியாது. இந்த கூட்டியக்கத்தின் செயல்பாடுகளால் தேர்தல் வரை அவர்களுக்கு நல்ல பொழுது போகும். வேறு எந்த நடவடிக்கையும் இருக்காது. இவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை உலுக்கியபோதும் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 39 தொகுதிகளில் நின்று 37 இடங்களில் வென்று அகில இந்தியாவில் 3வது பெரிய கட்சி என்று விசுவரூபம் எடுத்துள்ளோம்.
எனவே, இவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வந்துவிட போவதில்லை. அதிமுக பட்டத்து யானை. இதனை சிறு எலிகளால் சிதைக்க முடியாது என்றார் சம்பத்.