வெள்ளத்தால் மண் மேடான விவசாய நிலங்களை அரசே செப்பனிட வேண்டும் - மக்கள் நலக் கூட்டணி
சென்னை: வெள்ளத்தால் மண் மேடாகிப் போய் விட்ட விவசாய நிலங்களை அரசே செப்பனிட்டுக் கொடுத்தால்தான் விவசாயிகள் மீண்டும் தங்களது விவசாயப் பணிகளை தொடங்க முடியும் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் இத்தலைவர்கள் கூறியுள்ளதாவது:

கடலூரில் பேரழிவு
கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டம் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. விவசாய சாகுபடி நிலங்கள் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் முற்றாக அழிந்துவிட்டது. நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி மற்றும் சவுக்கு உள்ளிட்ட விளைபொருட்கள் சேதமடைந்து விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மண் மேடான விவசாய நிலங்கள்
பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் வட்டாரங்களில் வெள்ள நீர் பாய்ந்ததால் மூன்று அடி வரையில் மண் மேடாகி, பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாழாகி விட்டன. இந்நிலையில், மண் மூடி சிதைந்துபோன விவசாய நிலங்களில் மண்ணை அகற்றி செப்பனிடுவதற்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா எந்த அறிவிப்பும் வெளியிடாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வரின் உதவி ஏமாற்றமே
முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வெள்ள நீரால் மண்மேடாகிப்போன விளை நிலங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் இயந்திரங்களைக் கொண்டு தமிழக அரசே செப்பனிட்டுத் தந்தால்தான் மறு பயிர் சாகுபடி செய்ய உகந்ததாக இருக்கும்.

செப்பனிட்டுத் தர வேண்டும்
எனவே தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் இது போன்று வெள்ள நீரால் மண் மேடாகிப்போன விளை நிலங்களை செப்பனிட்டு, சீர்திருத்தம் செய்ய ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடன்களை ரத்து செய்யுங்கள்
வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கூட்டுறவு விவசாயக் கடன்களை தமிழக அரசு முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

வட்டியை ரத்து செய்க
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடனாக விவசாயிகளின் சிட்டா அடங்கலை வைத்துக் கொண்டு வழங்கப்பட்டுள்ள நகை கடன்களுக்கான அசல், வட்டி, அபராத வட்டித் தொகையை ரத்து செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் துப்புரவுப் பணி
இதற்கிடையே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications