மாதிரிப் பள்ளிகள் விவகாரம்: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி விளக்கம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் தொடங்க உள்ள மாதிரிப் பள்ளிகள் பற்றி தமிழக அரசின் மீது எந்தவிதமான குறைபாட்டையும் நான் (கருணாநிதி) தெரிவிக்கவில்லை. மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் போக்கினை அனுமதிக்கக் கூடாது. இதற்கு மாநில அரசு அதன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் கூறினேன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக என்னைத் தாக்கி அறிக்கை விடுத்துள்ளார்.
திமுக ஆட்சியில் "ராஷ்ட்ரிய மத்யாமிக் சிக்ஷா அபியான்' எனும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் படியே மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தில் தனியாருக்கு இடம் அளிக்கப்படவில்லை. மாநில மொழியிலேயே (தமிழ்) கல்வி முறை இருக்கும் என்றும் குறிப்பிட்டு தான் தொடங்கப்பட்டது. மேலும் மாநில அரசை(திமுக) கலந்து கொண்டே இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டமாகும்.
இதில் தனியாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலேயே நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசைக் கலந்துகொள்ளாமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளது. இதற்கே மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.
தற்போது முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியிலான மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸும் நானும் விடுத்த அறிக்கைகளுக்கு உடனே ஜெயலலிதா, தன் விளக்கத்தைத் தெரிவித்திருந்தால், தமிழகத்துக்குப் பாதகம் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் அப்போதே வந்திருப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications