3 நாட்களுக்கு (மட்டும்) தமிழகத்தில் மோடி அலை வீசப் போகிறது!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 6ம் தேதி வருகிறார். 3 நாட்கள் அவர் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதை வைத்து கட்சியினரை "பூஸ்ட்" செய்ய பாஜக தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜகவின் நிலை சற்று பரிதாபம்தான். துணைக்கு வாட்ட சாட்டமாக யாரும் இல்லாததால் குட்டிக் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்துள்ளது பாஜக.
இந்த கட்சிக்காக பிரச்ச்சாரம் செய்ய இதுவரை அகில இந்தியத் தலைமையிலிருந்து முக்கியஸ்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் கட்சியினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வருகிறார்.
6ம் தேதி தமிழகம் வரும் மோடி, அன்று ஓசூர்-சென்னையிலும், 8ம் தேதி கன்னியாகுமரியிலும், 11ம் தேதி வேதாரண்யத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
மோடி சென்னையில் 6ம் தேதி பிரசாரம் செய்யும் அதே நாளில் ஜெயலலிதாவும் தனது ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டையில் இன்று அமித் ஷா பிரச்சாரம்
இதேபோல பாஜக தலைவர் அமித் ஷா இன்று பட்டுக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார். இவர் ஏற்கனவே கடந்த மாதம் திருச்சியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திலேயே கலந்து கொண்டு ஒரு தவணை பேசி விட்டார். தற்போது அடுத்த தவணைாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று பேசுகிறார். அங்கு முடித்து விட்டு தென்காசி, நாகர்கோவிலுக்கும் போகிறார். மாலையில் மதுரையில் பேசுகிறார். அதை முடித்து விட்டு கேரளா புறப்பட்டுச் செல்கிறார்.