எடப்பாடி, ஒபிஎஸ்ஸை பார்க்கும் மோடி விவசாயிகளை பார்க்கமாட்டாரா? - நக்மா தாக்கு: வீடியோ
பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒபிஎஸ்ஸை தனித்தனியாக சந்திக்கிறார். ஆனால் விவசாயிகளை சந்திக்க மட்டும் அவருக்கு நேரமில்லையா என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஒ.பன்னீர் செல்வத்தை தனியாகச் சந்திக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை தனியாகச் சந்திக்கிறார். ஆனால் பிரதமர் மோடிக்கு விவசாயிகளை மட்டும் சந்திக்க நேரம் இல்லையா என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை நக்மா அண்மைகாலமாக தமிழக அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நக்மா,''ரஜினி அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். அதேபோல் அவர் தனிக் கட்சி தொடங்குவதாக இருந்தாலும் அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்'' என கூறினார்.
மேலும் பிரதமர் மோடி குறித்து கூறுகையில்,'' எந்த பொறுப்பிலும் இல்லாத ஒ.பன்னீர் செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லையா? என நக்மா கேள்வி எழுப்பினார்.