தமிழக அரசின் மேடையில் மத்திய அரசின் திட்டங்களை விலாவாரியாக பேசி விளம்பரம் தேடிய மோடி!
தமிழக அரசின் மேடையில் மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி விலாவாரியாக பேசி விளம்பரம் தேடிக்கொண்டார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசின் மேடையில் மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி விலாவாரியாக பேசி விளம்பரம் தேடிக்கொண்டார். பட்ஜெட் உரையை போல மத்திய அரசின் திட்டங்களை அடுக்கினார் பிரதமர் மோடி.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு வண்டிக்கான சாவியை கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
பாஜக திட்டங்கள்
இதைத்தொடர்நது நிகழ்ச்சியில் பேசிய அவர் முழுக்க முழுக்க மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தே பேசினார். பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக பாஜக அரசுதான் உயர்த்தியது என்று அவர் கூறினார்.
திட்டங்களை விவரித்த மோடி
பெண்கள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து பிரதமர் மோடி பேசினார். மகளிருக்கான இருசக்கர வாகனம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரூ.15,000 கோடி மிச்சம்
உஜாலா திட்டத்தில், 29 கோடி எல்இடி பல்புகள் வினியோகம் செய்துள்ளோம் என்ற அவர், இதனால் 15 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
புகை மாசற்ற சிலிண்டர்
மேலும் இந்த திட்டத்தால் கார்பன் மாசு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். உஜ்வலா திட்டத்தின்கீழ் புகை மாசற்ற வகையில் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அதிக நிதி
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகுதான் தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸ் அரசை ஒப்பிட்டால் 120 சதவீதம் அதிக அளவுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்றும் மோடி கூறினார்.
பாஜக மேடையாக மாற்றிய மோடி
ஊரக வீட்டுவசதி துறைக்காக ரூ.700 கோடி 2016-17 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். கிட்டதட்ட தமிழக அரசின் ஸ்கூட்டர் மானிய திட்ட மேடையை பிரதமர் மோடி பாஜக நலத்திட்டங்களை புகழ்ந்து பேசும் மேடையாகவே மாற்றிவிட்டார்.