மோடி அரசின் நீட் தேர்வு திணிப்பே மாணவர்கள் உயிர்பலிக்குக் காரணம்: வைகோ
மோடி அரசின் நீட் தேர்வு திணிப்பே மாணவர்கள் உயிர்பலிக்குக் காரணம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மோடி அரசின் நீட் தேர்வு திணிப்பால் தமிழகத்தில் மாணவர்கள் பலியாவது தொடர்ந்து வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தேர்வில் தோல்வியடைந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் நீட் மரணங்கள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் கோணல்
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர்களுள் சுமார் 39.55 விழுக்காடு அளவில் வெறும் 45,336 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் அமையும் என்று கூறினார். ஆனால் இரண்டே நாளில் தாம் கூறியதையும் மறுத்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது முதல் கோணல்.
மாணவர்களுக்கு மன உளைச்சல்
அடுத்து, நீட் தேர்வு எழுதும் மையங்கள் ஒதுக்கீடு செய்ததில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழக மாணவர்களை அலைக்கழித்தது. கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இது இரண்டாவது கோணல். இதுபோன்ற காரணங்களால் நீட் தேர்வில் தமிழகம் குறைந்த அளவில் தேர்ச்சி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது.
நீட் தேர்வால் தற்கொலை
மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்ததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இன்னொரு மாணவியைத் தமிழ்நாடு இழந்து இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் மாணவி பிரதீபா, படிப்பில் படு சுட்டியாக இருந்ததால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். 12 ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண் பெற்றார்.
மாணவி தற்கொலை
ஆனால், நீட் நுழைவுத் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் பெற்றதை எண்ணி மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். நேற்று மாலை எலி மருந்தை உட்கொண்ட அவர், திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் இழந்தார். மோடி அரசின் நீட் தேர்வு மோசடி, அனிதா, பிரதீபா ஆகிய இரு உயிர்களைப் பலிவாங்கி இருக்கின்றது. இனியும் இந்தப் பட்டியல் தொடரக் கூடாது.
எதிர்காலம் இருக்கிறது
நீட் தேர்வில் தேர்ச்சிபெற இயலாத மாணவ மாணவியர், எத்தனையோ துணை மருத்துவப் படிப்புகளும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெறக்கூடிய அளவுக்கு பல கல்லூரிகளும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அவற்றில் சேர்ந்து பயில முயற்சிக்க வேண்டும். மாறாக, தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.