ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் மோடி - வானதி தகவல் !
வேலூர்: உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பற்றி அறிய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்றிரவு அறிக்கை அளித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தும், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்தும் செல்கின்றனர். அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை அப்பல்லோவிற்கு வந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ராகுலிடம் விளக்கம் அளித்தனர். ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கொலையை அடுத்து ஏற்பட்ட வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று வந்தார்.
கைதானவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரை சந்திக்க சென்ற தலைவர்களும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாக கூறி உள்ளனர்.
ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி அறிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். பிரதமர் மோடியும் தேவைப்பட்டால் ஜெயலலிதா உடல்நலம் பற்றி அறிய சென்னைக்கு வருவார்''என்று கூறினார்.












Click it and Unblock the Notifications