மோடி தலைமையில்தான் மத்தியில் அடுத்த ஆட்சி அமையும்- எஸ்.வி.சேகர்
வைத்தீஸ்வரன் கோவில்: வருகிற லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
முன்பு பாஜகவில் இருந்தவர் எஸ்.வி.சேகர். பின்னர் அதிமுகவில் இணைந்து அங்கிருந்து நீக்கப்பட்டார். இடையில் திமுக ஆதரவு நிலையை எடுத்தார். தற்போது மீண்டும் அதிமுகவில் சேர முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் சேகர். வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்பாள் உடனாகிய கோவிலுக்கு வந்த எஸ்.வி.சேகர், மனைவி உமாமகேஸ்வரி, நடிகரும் மகனுமான அஸ்வின்சேகர், மருமகள் சுருதி, பேத்தி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பி்ன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

குலதெய்வம் கோவில்
சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரம் எனது சொந்த ஊர். வைத்தீஸ்வரன் கோவில் எனது குலதெய்வம், கடந்த 55 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து செல்கிறேன். கோயிலில் பராமரிப்பு பணிகள் குறைவாக உள்ளது. ஆனால் குருக்கள், ஆகமவிதிப்படி பூஜைகளை செய்து வருகின்றனர்.

பயந்து கொண்டே வரும் பக்தர்கள்
கோவிலில் மேற்கு கோபுரவாசல் வழியாக வரும்போது இரண்டு இடங்களில் மேல் தளம் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயந்து கொண்டே வரும் நிலை உள்ளது.

ஆதீனத்திடம் கொடுக்கலாம்
புராதாண கோவில்களை ஆதீனங்கள் பராமரிக்க வேண்டும். கோவிலில் சிதலமடைந்த பகுதிகளை சீரமைத்து கொடுப்பதற்கு நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால் கோவில் நிர்வாகமே பராமரித்து கொள்ள பணம் கொடுக்க முன் வரமாட்டார்கள். எனவே தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள 27 கோவில்களையும் பராமரிக்க வேண்டியது ஆதீனத்தின் பொறுப்பு.

இல்லாட்டி அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளும்
கோவிலை சரிவர பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மோடிதான் ஆட்சியமைப்பார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதம வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதால் பெரும்பான்மை மெஜாரிட்டியுடன் பாரதீய ஜனதா நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்பதை காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் வேதனையுடன் உணர ஆரம்பித்துள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என்ற பிரச்சாரத்தை வைத்து பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியாது.

மோடி பிரதமராவதை தடுக்க முடியாது
இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் தான் பல மதக்கலவரங்கள் நடந்து உள்ளது. நரேந்திரமோடி பிரதமர் ஆவதை யாராளும் தடுக்க முடியாது.

இளைஞர்கள் தீர்மானித்து விட்டனர்
இந்தியாவில் வாக்காளர் 30 சதவீதம் பேர் மட்டும் கட்சியை சார்ந்தவர்கள். 70 சதவீதம் பேர் பொதுமக்கள். 70 சதவீதத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இளைஞர்கள். இவர்கள் நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும் என தீர்மானித்து விட்டனர்.

முஸ்லீம்களே ஆதரிக்கின்றனர்
குஜராத்தில் முஸ்லீம்கள் பெரும்பாலானோர் மோடியை ஆதரிக்கின்றனர். உண்மையை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் குஜராத் சென்று பார்த்து விட்டு பின்பு பேசுவது பொருத்தமாக இருக்கும்.

வாக்கு வங்கி உயர்ந்து விட்டதே
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்ததால் இந்தியாவில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீதவாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications