கலகலக்கும் ம.தி.மு.க.: மாநில மகளிர் அணி செயலர், சேலம் மா.செ., நிர்வாகிகள் தி.மு.க.வில் ஐக்கியம்!!
சென்னை: ம.தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார், சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் அம்மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ம.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்த பாலவாக்கம் சோமு, தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கடந்த 13-ந் தேதி அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் ம.தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமார், சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இவர்களுடன் ம.தி.மு.க. சேலம் மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.ராஜேந்திரன், டி.ஆனந்தி கண்ணன், சேலம் மாவட்ட அவைத்தலைவர் வே.ஜெயவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ஒய்.கே.ஆர்.பழனிசாமி, வாழப்பாடி ஒன்றிய செயலாளர் ஆ.புகழேந்தி, ஓமலூர் ஒன்றிய செயலாளர் கு.பழனிசாமி, சேலம் ஒன்றிய செயலாளர் கே.ராஜேந்திரன், கோ.பெருமாள், சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.கே.பிரபு உள்ளிட்டோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து குமரி விஜயகுமார் நிருபர்களுக்கு கூறியதாவது:
80% ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வைகோ மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள். தி.மு.க.வை உயர்த்திப்பிடிப்பதில் நாங்கள் அயராது உழைப்போம். கடந்த ஒரு மாத காலமாக வைகோவின் செயல்பாடுகள் முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளதாகவே இருக்கிறது. தி.மு.க. கூட்டணி வேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. நான் 22 ஆண்டுகள் ம.தி.மு.க.வில் இருந்து எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் போய்விட்டது. எனது உழைப்பும், நேரமும் வீணாகிவிட்டது. இனிமேலாவது தி.மு.க.வில் இணைந்து கருணாநிதி தலைமையிலும், மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலிலும் செயல்பட இருக்கிறோம்.
இவ்வாறு குமரி விஜயகுமார் கூறினார்.
சேலம் மாவட்ட செயலாளராக இருந்த தாமரைக்கண்ணன் கூறுகையில், ம.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் வைகோ கூட்டணி நிலைப்பாட்டில் இருந்து தவறுகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்றார். கடந்த 7-ந் தேதி கூட்டணி இல்லை என்று அறிவிக்கிறார். தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற வைகோ நிலைப்பாடு எனக்கு பிடிக்கவில்லை. எனவே அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தற்போது இணைந்துள்ளேன். சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எனது ஆதரவாளர்களுடன் மாபெரும் இணைப்பு விழாவை நடத்துவேன் என்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் தொடர்ந்து வெளியேறி இருப்பது அக்கட்சி நிர்வாகிகளை கதிகலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications