பெண்ணுக்கு ரூ90 லட்சம் கிடைக்க வழி செய்த 'மக்கள்' நீதிமன்றம்! தமிழகத்தில் 300 இடங்களில் விசாரணை!!
சென்னை: இந்தியாவில் நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் "லோக் அதாலத்" என்னும் மக்கள் நீதிமன்றம் இன்று தேசிய அளவில் நடத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு முதல் குற்றவியல் நீதிமன்றங்கள் வரை அனைத்து கோர்ட்டுகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை ஹைகோர்ட்டில் ‘‘லோக் அதாலத்'' தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த மாபெரும் லோக் அதாலத்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான நீதிபதி தாக்கூர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மக்கள் நீதிமன்றத்திற்காக சென்னை ஹைகோர்ட்டில் 11 நீதிபதிகள் தலைமையில் 11 சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் தலா ஒரு வக்கீல், ஒரு ஓய்வுப்பெற்ற மாவட்ட நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு அமர்வும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. சென்னை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு நடத்திய லோக் அதாலத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வில், விபத்து வழக்கில் ஒரு பெண்ணுக்கு ரூபாய் 90 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது.
இதுபோன்ற பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை இந்தியன் வங்கிக்கும், புவனேஸ்வரி என்பவருக்கும் இடையே கடன் தொடர்பான வழக்கு சென்னை சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் இரு தரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து ரூபாய் 2.50 கோடியை வங்கி நிர்வாகத்துக்கு வழங்க புவனேஸ்வரி சம்மதம் தெரிவித்தார். இதை வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.
கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை, பூதப்பாண்டி ஆகிய 5 கோர்ட்டுகளிலும் மெகா லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மாவட்டம் முழு வதிலும் தீர்வு காணப்படாமல் இருந்த 12 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இருந்தன.
நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த மெகா லோக் அதாலத்திற்கு மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வழக்குகளை விசாரிக்க இங்கு 4 இடங்களில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.
இன்று மட்டும் தமிழகம் முழுவதிலும் சுமார் 300 லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் மொத்தம் 14 லட்சம் வழக்குகளில் இன்று மாலைக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.