பணம் கொடுத்தால் அரசு வேலை (62.8%), ஆளும் கட்சியின் கைப்பாவை தேர்தல் கமிஷன் (45.7%)-சர்வே
சென்னை: லஞ்சம் கொடுப்பவர்களுக்கே அரசு வேலை கிடைக்கிறது என்று 62.8 சதவீதம் பேர் ஆதங்கம் தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி தனது கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அரசு பணியில் ஒளிவு மறைவு
இந்த கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள சில சுவாரசிய தகவல்களை இதில் பார்க்கலாம்: தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு நேர்மையாக, ஒளிவு மறைவின்றி நடக்கிறது எனக் கூறியவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. 12.4% மக்கள்தான் இப்படி கூறியுள்ளனர்.

லஞ்சத்துக்கு மதிப்பு
லஞ்சம் கொடுப்பவர்களுக்கே வேலை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியோர் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். 62.8% மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இதன்மூலம் அரசு வேலை கிடைக்க பணம் தேவை என்ற கருத்து ஆழமாக மக்களிடம் பதிவாகியுள்ளது தெளிவாகிறது. கொடுத்த பணத்தை திரும்ப சம்பாதிப்பதற்காக, கிடைத்த வேலையை தவறாக பயன்படுத்துவோரும் இந்த அதிருப்தியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதால் இது சமூகத்திற்கு ஆபத்தான போக்கு.

சிபாரிசுக்கும் முக்கிய பங்கு
பணம் தவிர்த்து, அதிமுகவினராகவோ அல்லது அமைச்சர்கள் சிபாரிசு பெற்றவர்களாகவோ இருந்தால்தான் அரசு வேலை கிடைக்கிறது என்றவர்கள் 13.1%. இது ஆட்சியாளர்களையும், அவர்களின் அதிகார மையங்களையும் குளிர்விக்க வேண்டிய அவசியத்தில் அதிகாரிகளாக பதவிக்கு வரப்போகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கிறது.

யாருமே கிடையாது
மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் கட்சி எது என்பதற்கு, எந்தக் கட்சியும் இல்லை என்று சொன்னவர்களே அதிகம் 26.6% மக்கள் இப்படிச் சொல்லியுள்ளனர். அடுத்தபடியாகத்தான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்குகள் கிடைத்துள்ளன.

தேர்தல் ஆணையம்
கட்சிகள் மற்றும் கட்சி தலைவர்கள் மதிப்பீடுகளை தாண்டி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் இக்கருத்துக் கணிப்பில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறது என 45.7 சதவீதம் பேரும், நடுநிலையாகச் செயல்படுகிறது என 36.2 சதவீதம் பேரும் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆட்சியில் பங்கு
அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கோரிக்கையை ஒட்டியே பல மக்களும் சிந்திக்கிறார்கள். இந்த கோரிக்கை வரவேற்கத்தக்க கோரிக்கை என்று 35.5 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், நடைமுறையில் சாத்தியமில்லை என்று 35.2 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இரு பெரும் கட்சிகளும் ஆட்சியில் பங்கு தராது என்பதில் மக்கள் ஆழ நம்பிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications