பச்சிளம் குழந்தையைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய் - சேலத்தில் பரிதாபம்!
சேலம்: சேலத்தில் ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையைக் கொன்று விட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ளது கூட்டாத்துப்பட்டி. இங்குள்ள காந்தி காலனியை சேர்ந்தவர் கயல்விழி. இவருக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த காளியப்பன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கயல்விழி கர்ப்பம் ஆனார். இதையடுத்து பிரசவத்திற்காக அவர் தனது பெற்றோர் வீடான கூட்டாத்துப்பட்டிக்கு சில மாதத்திற்கு முன்பு வந்து இருந்தார். பின்னர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்து ஒருமாதம் ஆகிறது.
இந்த நிலையில் கயல்விழிக்கு உடல் நிலை பாதித்தது. இதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கயல்விழியையும், குழந்தையையும் காணவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்கள் அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். ஆனால் எங்கும் அவர் இல்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை கயல்விழி கூட்டாத்துப்பட்டியில் உள்ள கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தார்.
இதை அறிந்த கயல்விழியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனே சம்பவ இடம் சென்று கயல்விழியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் சம்பவ இடம் வந்து கயல்விழியின் உடலை மீட்டு விசாரித்தனர். கயல்விழியின் உடல் மட்டும் கிணற்றில் மிதக்கிறது. குழந்தையின் உடல் என்ன ஆனது என தெரியாமல் உறவினர்கள் கிணற்றில் குதித்து குழந்தையின் உடலை தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
பின்னர் கயல்விழியின் பெற்றோரும், உறவினர்களும் வீட்டிற்கு வந்து குழந்தையை தேடினர். அப்போது வீட்டுக்குள் இருந்த பக்கெட் ஒன்றில் குழந்தை பிணமாக கிடந்தது. குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் பக்கெட்டில் உடலை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
குழந்தையை தேடும்போது கயல்விழி எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. இதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் குழந்தைக்கு என்னால் சரியாக பால் தரமுடியவில்லை. குழந்தை அழுவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தையும், இறந்து கிடந்த குழந்தையின் உடலையும் போலீசார் மீட்டு விசாரித்து வருகிறார்கள். கயல்விழி தனது குழந்தையை கொன்று விட்டு பின்னர் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட கயல்விழி கூட்டாத்துப்பட்டி பிரபல ரவுடி விஜயனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.