தினமும் தொந்தரவா... அரிவாளால் சரமாரி வெட்டு... குடிகார மகனை போட்டுத் தள்ளிய தாய்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் தாயார்.
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிபோதையில் தினசரி பிரச்சினை செய்து வந்த, குடிக்கப் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்த மகனை, கறி வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றார் ஒரு தாய்.
கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (46). இவருக்குத் திருமணமாகி விட்டது. மனைவி பெயர் சுமதி. குழந்தைகள் உள்ளன. தனது தாயார் ஆறுமுகம், தாயார் லட்சுமியுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி. அருகில் வசித்து வருகிறார்.
அண்ணாதுரைக்கு குடிப்பழக்கம் உண்டு. தினசரி குடிப்பார். தாயாரிடம் குடிக்கப் பணம் கேட்டு நச்சரிப்பார். தகராறு செய்வார். மேலும் தனது தந்தையின் சீட்டுப் பணத்தையும் தனக்கேத் தர வேண்டும் என்று பிரச்சினை செய்து வந்தார். இதனால் வீட்டில் யாருக்கும் நிம்மதி இல்லை.
நேற்று இரவும் லட்சுமியிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர் பெரும் வேதனையும், கோபமும் அடைந்தார். மகனை தீர்த்துக் கட்டினால்தான் அனைவருக்கும் நிம்மதி என்ற முடிவுக்கு வந்த அவர் இரவில் அனைவரும் தூங்கிய பின்னர் கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மகனது கழுத்தை சரமாரியாக வெட்டினார். இதனால் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுகுறித்து சுமதி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அதற்குள் லட்சுமியே போலீஸில் சரணடைந்து விட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.