யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.. தாயாருடன் மகன் தற்கொலை
ஓசூர்: யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று எழுதி வைத்து விட்டு 40 வயதான நபரும், அவரது 70 வயது தாயாரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னை அருகே உள்ள ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. 40 வயதான இவரது தாயாருக்கு 70 வயதாகிறது. இருவரும் கடந்த 12ம் தேதி ஓசூர் புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.
அறைக்குள் போன இருவரும் பின்னே வெளியே வரவில்லை. இதை லாட்ஜ் ஊழியர்களும் கவனிக்காமலேயே இருந்துள்ளனர். 3 நாட்களாக இருவரும் அறைக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்படியும் லாட்ஜ் ஊழியர்கள் கவனிக்கவில்லையாம்.
இந்த நிலையில், அறைக்குள்ளிருந்து துர்நாற்றம் அடிக்கவே போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது தாயும், மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தனர். இருவரது உடல்களும் அழுகியிருந்தன.
அறை எடுத்து தங்கிய நாளிலேயே இருவரும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. இருவரும் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாத காரணத்தினால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர்.
ஏன் இந்தத் தற்கொலை முடிவு என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications