நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

திருநெல்வேலி: மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போலீசாரின் தரக்குறைவான பேச்சுகளால் மனமுடைந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுாரை அடுத்துள்ள மாவடிக்காலை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி மகேஸ்வரி. 50 வயது மகேஸ்வரியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் 19 வயது மகள் தேவிகங்காவும் கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தேவிகங்காவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தென்காசி நீதிமன்றத்தில் மகேஸ்வரி மனு செய்தார். கோர்ட், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இருப்பினும் இதுகுறித்து விசாரணைக்கு அழைத்த புளியங்குடி போலீஸ் அதிகாரி, மகேஸ்வரியை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.

எனவே இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மகேஸ்வரி நுழைவுவாயிலில் தலை மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். எனினும் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் போலீசார் அவரை தடுத்து மீட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் அழைத்துச்சென்றனர்.
இன்று நடக்கும் திங்கள்கிழமை மனுநாளில் அவரது குறைகளை கேட்டறிந்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்துள்ள தீக்குளிப்பு சம்பவத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தீக்குளிப்பு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications