அட இது கூட நல்லாயிக்கே... ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
அரசியல் தலைவர்களை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்வது என்பது வலைஞர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. சினிமா தலைப்புகளை வைத்து எந்த படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரூம் போட்டு யோசித்த சிலர் பிரபல படத்தின் தலைப்புகளை அரசியல்தலைவர்களுக்கு வைத்துள்ளனர்.
சினிமாவிற்கு தலைப்பு வைக்க வருஷக்கணக்கில் ரூம் போட்டு யோசிக்கிறது ஒரு கும்பல், ஆனால் அசராமல் அதை உருவி மேட்ச் செய்து நோகாமல் நோன்பி கும்பிடுகின்றனர் வாட்ஸ்அப்வாசிகள். ருத்ரம்மா தேவி, தூங்காவனம், நானும் ரவுடிதான், வேதாளம், புலி, தனி ஒருவன் என சூப்பர் ஹிட் படங்களின் தலைப்புகள், இன்றைய டிரெண்டுக்கு கரெக்டாக மேட்ச் ஆகியிருப்பதுதான் சுவாரஸ்யம்.
இப்படி ஒரு சுவாரஸ்யமான வாட்ஸ் அப் பதிவு நமக்க வந்தால் விடுவோமா? பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நம்ம நேயர்களுக்கு அளித்திக்கிறோம். படம் மட்டும்தான் வாட்ஸ்அப் காரங்களுது... கதை நம்மது... ஸ்வீட் பொங்கல் கிண்டியிருக்கோம் சாப்பிட்டுட்டு நல்ல கமெண்டா போடுங்க பாய்ஸ்.
ருத்ரமாதேவி - ஜெயலலிதா
அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி 5வது ஆண்டாக வெற்றி நடைபோடுகிறது என்கிறது போஸ்டர். 2011 மே மாதம் பதவியேற்ற ஜெயலலிதா சில பல தடைகளை தாண்டி 5வது ஆண்டினை நிறைவு செய்யப்போகிறார். எத்தனை இடர்கள் வந்தாலும் அசராமல் தனக்கு வரும் பந்துகளை சிக்சர்களா மாற்றுபவர் ஜெயலலிதா. எதிரிகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் களத்தில் காணோமே என்று கடந்த 2014ல் அதிமுக தலைமை அலுவலகம் வந்த போது பேசி தொண்டர்களை உசுப்பேற்றி விட்டு எதிர்கட்சியினரை கடுப்பேற்றிவிட்டு போனார். மீண்டும் நேற்று தலைமை அலுவலகம் வந்த ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெறும், அதனை மனதில் வைத்து தொண்டர்கள் களப்பணியாற்றுங்கள் என்று கூறிவிட்டு போயிருக்கிறார். இதைக்கேட்ட ரத்தத்தின் ரத்தங்களோ, நம்ம 'ருத்ரம்மதேவி' அசராமல் 5 ஆண்டுகளை கடந்து 6வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
தூங்காவனம் - கருணாநிதி
கமல் நடித்த தூங்காவனம் படத்தின் ஹீரோ கருணாநிதி. "என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன்" என்று கருணாநிதி சொல்லும் வார்த்தைகள் தமிழகம் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. அவருக்கு ஏன் 'தூங்காவனம்' என்றால் 5 முறை முதல்வரான பின்னும் 6வது முறையாக ஆட்சியை பிடிக்க அசராமல் உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி. நேற்றைய பேட்டியில் கூட திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறி உடன்பிறப்புக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார். 90 வயதுக்கு மேலும் தூங்காமல் இருப்பதினாலே கருணாநிதிக்கு தூங்காவனம் டைட்டில் கொடுத்துள்ளனர்.
வேதாளம் - விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்போ எந்த முடிவு எடுப்பார்? யாருடன் கூட்டணி சேருவார்? என்று யாராலும் கணிக்க முடியவில்லை. மக்களுடன் கடவுளுடன் கூட்டணி என்று கூறிய விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தார். 2014 லோக்சபா தேர்தலில், பாஜக உடன் கூட்டணி சேர்ந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி என ஆள் ஆளுக்கு எங்க கூட வாங்க... எங்க கூட வந்திருங்க என்று கூப்பிடுகின்றனர். ஆனால் விஜயகாந்த் முடிவுதான் என்னவென்று யாராலும் கணிக்க முடியவில்லை. 'வேதாளம்' எப்போ எந்த முருங்கை மரம் ஏறும் என்று தெரியாதே?
புலி - வைகோ
இது அசரா புலி... அட்டாக் பண்ற புலி... என்று டி.ஆர் பாணியில் சொல்லிக்கொண்டே போகலாம்... திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை ஆரம்பித்த வைகோ, மீண்டும் திமுக உடன் கூட்டணி பேச்சு, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து போணியாகவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் ஆடிய போங்கு ஆட்டத்தில் கடுப்பாகி தேர்தலை புறக்கணித்தார் வைகோ. 2014 லோக்சபா தேர்தலில் வாலண்டியராக பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது என்று கூறினார். ஆட்சி அமைந்து சில மாதங்களிலேயே கூட்டணியை விட்டு விலகிய வைகோ, இப்போது விசிக, கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். எனவேதான் 'புலி' டைட்டிலை வைகோவிற்கு சூட்டியுள்ளனர் போலும்.
நானும் ரவுடிதான் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் என்று குஷ்பு காமெடி பண்ண, 'நானும் ரவுடிதான்' என்கிற ரேஞ்சில் பேசி வருகிறார் இளங்கோவன். காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணி அமையாவிட்டால், தனித்து நிற்கவும் தயங்கமாட்டோம். என்று கூறுவதற்காகவே அவருக்கு 'நானும் ரவுடிதான்' என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர்.
தனி ஒருவன் - அன்புமணி
அப்பாவினால் ஆளுக்கு முதலாய் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மண்டலவாரியாக மாநாடு நடத்தி, மாஸ் காட்டியும் கூட்டணிக்கு யாரையும் காணோமே என்று கவலையோடு காத்திருக்கிறார் அன்புமணி. தேர்தல் களத்தில் தனியாக இருக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ்க்கு 'தனி ஒருவன்' பட்டத்தைக் கொடுத்திருக்கின்றனர்.