பேச மட்டும்தான் டிஜிட்டல்.. எண்ணெய் கழிவை அகற்ற வாளிதான்.. கனிமொழி ஆவேசம்
டிஜிட்டல் இந்தியாவில் கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்ற வாளிதான் வழங்கப்படுகிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை: கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய பகுதியான எண்ணூர் பகுதியில் ராஜ்ய சபா எம்பி கனிமொழி நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பரவியுள்ள எண்ணெய் படலத்தால் கடல் கடுமையாக மாசடைந்துள்ளது. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்ற கனிமொழி, அப்பகுதியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற பல வாரங்கள் ஆகும். சில வெளிநாடுகளில் பல மாதங்கள் கூட ஆகியிருக்கிறது. அதனால் இதை 2 அல்லது 3 நாட்களில் அகற்றப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டு போனால் அது நியாயம் இல்லை.
நிவாரணம்
இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு என்ன என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வந்தால் அதனை வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அவர்ளுடைய எதிர்காலம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
ஒத்துழைப்பில்லை
பல பிரச்சனைகள் இதில் உள்ளது. இந்தப் பிரச்சனையை ஒரே கோணத்தில் அணுக முடியாது. அதனால் அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமை இங்கு இல்லை. கடலோர காவல்படையினரும், துறைமுக அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பே இல்லை.
பாதுகாப்பு உபகரணங்கள்
மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை. இன்றுதான் பலருக்கு கை உறையும், கால் உறையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கூட நச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது உடல் பாதுகாப்பதற்கு எதுவும் இல்லை.
டிஜிட்டல் இந்தியாவில் வாளி
வாளியாலும், கையாலும்தான் இந்த எண்ணெய் கழிவை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாட்டில் எண்ணெய் கழிவுகள் வாளியில்தான் அள்ளி அகற்றப்படுகிறது. அரசு வழங்கியுள்ள அறிக்கையில் கூட வாளி வழங்கப்பட்டுள்ளது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரிகிறது. முறையான தொழில்நுட்ப வல்லுநர்கள் யாரும் இங்கு இல்லை. இதனை சரி செய்யக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களும் இங்கு இல்லை.
ராஜ்யசபா
இந்த பிரச்சனை குறித்து திமுக தொடர்ந்து பேசி வருகிறது. நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். அதற்கான பதிலையும் அவர்கள் அளித்திருக்கிறார்கள். மேலும், இன்று பார்வையிட்ட பின்னர் உள்ள நிலையை மீண்டும் நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சர்களிடத்திலும் எடுத்துக் கூற உள்ளோம் என்று கனிமொழி கூறியுள்ளார்.