அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர்.... மைத்ரேயன் குற்றச்சாட்டு
அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுவதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுவதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
சிதைந்துள்ள அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே விரைவில் பேசுவார்த்தை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாகத்தில் ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டதாக கூறிய அந்த அணியினர் சசிகலா பெயரிலும் டிடிவி தினகரன் பெயரிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இதன்மூலம் எடப்பாடி அணியினர் நடத்திய நாடகம் என்பது அம்பலமாகியிருப்பதாகவும் அவர் கூறினார். மைத்ரேயனின் இந்தப் பேச்சால் இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications