வாக்கிங் போன போது ஷேர் ஆட்டோ மோதி பெரம்பலூர் அதிமுக எம்.பி. மருதைராஜா படுகாயம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதை ராஜா மீது ஷேர் ஆட்டோ மோதியதில் அவர் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரம்பலூர் எம்பியாக இருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.பி.மருதை ராஜா(51) பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருதைராஜா தனது மகன் பிரசன்னாவுடன் துறையூர் சாலையில் நேற்று காலை நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மருதைராஜாவுக்கு பின்தலை, கை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது. பிரசன்னா லேசான காயமடைந்தார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற இருவரும், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் செஞ்சேரியைச் சேர்ந்த மணி கண்டன் (29) என்பவரை பெரம் பலூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் கல்லங்குறிச்சி கலிய பெருமாள் கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பும்போது, ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த மணிகண்டன் களைப்பில் கண்ணயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருதராஜா எம்.பி.யை அமைச்சர்கள் தங்கமணி, டி.பி. பூனாட்சி, அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி ஆகியோர் பார்த்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications