முல்லைபெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது.. மோடியே நேரடியாக தலையிட வேண்டும்- ஜெ. கோரிக்கை!
சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வு நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயலுவது, உச்சநீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது. 2014, மே 5ம் தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவை மீறி, கேரளா கோர்ட் அவமதிப்பு செய்கிறது. முல்லை பெரியாறு அணை பலமானதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கேரளா தாக்கல் செய்த மனு அதே ஆண்டு டிசம்பர் 1ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
முல்லை பெரியாறு விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் நிலையில், புதிய அணை கட்ட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரளா அனுமதி கேட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த உள்ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழகம் சார்பில், கேரளா நடவடிக்கையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜூலை மாதம் அந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரளா புதிய அணை கட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி தரக்கூடாது.
இந்த விஷயத்தில் நீங்கள் (மோடி) நேரடியாக தலையிட்டு, கேரளாவின் வேண்டுகோளை புறக்கணிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications