10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... 'மாஜி' முல்லைவேந்தன் அறிவிப்பு
சென்னை: 10,000 பேருடன் தே.மு.தி.க.வில் விரைவில் தாம் இணைய உள்ளதாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டசபை தொகுதியில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முல்லைவேந்தன். இவர் 1996 ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. அதற்கு, பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்ததால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் விரைவில் அ.தி.மு.க.வுக்கு தாவுவார்; பாரதிய ஜனதாவுக்கு போகிறார் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முல்லைவேந்தன் கூறியதாவது:
உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார்.
மற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின் தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள். விரைவில் நான் 10,000 ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணைய உள்ளேன்.
இவ்வாறு முல்லைவேந்தன் கூறினார்.












Click it and Unblock the Notifications