குக்கர் பொங்கல், ஸ்டிக்கர் கோலம், கரும்பு ஜூஸ்: இது நவீன பொங்கல்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு கரும்பை கடித்து திண்ற காலம் போய் ஜூஸ் போட்டுக் குடிக்கும் காலம் வந்துவிட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி பொங்கலுடன் தித்திக்கும் கரும்பை சாப்பிட பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது.
கரும்பை கடித்து மெல்வது நல்லது என்பார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இப்போது உள்ள இளசுகளும் சரி, குட்டீஸ்களும் சரி கரும்பை கடித்து சாப்பிட எரிச்சல் அடைகிறார்கள். ஓ மை காட், கரும்பை கடிக்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள்.
சிலர் கரும்பை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடுகிறார்கள். சிலர் அதை மெல்ல எரிச்சல்பட்டு ஜூஸாக்கி குடித்துவிடுகிறார்கள். கரும்பு தான் இப்படி என்றால் மண் பானை வைத்து பொங்கலை பொங்கவிட்டு குலவையிடுவதும் குறைந்துவிட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும் சரி, தனி வீடுகளில் இருப்பவர்களும் சரி சமையல் அறையில் குக்கரில் பொங்கல் வைக்க பழகிவிட்டனர். கோலமாவது மாவில் போடுகிறார்களா என்றால் இல்லை. கடையில் ஸ்டிக்கரை வாங்கி வந்து வீட்டு வாசலில் ஒட்டிவிடுகிறார்கள்.
நவீன யுகத்தில் பொங்கல் பண்டிகையும் நவீனமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.