சீரகசம்பா அரிசியில் கறி போட்டு காரசாரமாய் மண மணக்க... முனியாண்டிக்கு பிரியாணி படையல்!
சர்க்கரை பொங்கலை சாமிக்கு படைத்து பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால் சீரக சம்பா அரிசியில் சரிக்கு சரி கறி போட்டு கார சாரமாய் மணக்க மணக்க பிரியாணி செய்து முனியாண்டிக்கு படையலிட்டு அதை பிரசாதமாய் கொடுக்கின்றனர் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்.
முனியாண்டி விலாஸ் ஹோட்டல் பற்றி நம் ஊர் பக்கத்தில் ஒரு நகைச்சுவை கூறப்படுவதுண்டு. நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைக்கும் முன் அங்கே ஒரு டீக்கடை இருந்ததாம் யாரென்று பார்த்தால் கேரளத்து நாயர் ஒருவர் டீக்கடை நடத்திக் கொண்டிருந்தாராம்.
சற்று தள்ளி போய் பார்த்த போது ‘மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ்' என்ற அசைவ ஹோட்டலும் நிலாவில் இருந்ததாம் அந்த அளவிற்கு பிரபலமானது முனியாண்டி விலாஸ் ஹோட்டலும், பிரியாணியும்.
தங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் குல தெய்வமான முனியாண்டிக்கு ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று பிரியாணியையே பிரிசாதமாக படைத்து திருவிழா எடுக்கின்றனர் நாயுடு சமூகத்து மக்கள்.

பிரியாணி திருவிழா
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வடக்கம்பட்டி. இங்குள்ள முனியாண்டிதான் நாயுடு சமூகத்தினரின் குல தெய்வம். முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் மூலவர். இந்த ஆண்டு பிரியாணி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலபிஷேகம்
இந்த ஆண்டு திருவிழாவை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முனியாண்டி விலாஸ் ஹேட்டல் நடத்துபவர்கள் வடக்கம்பட்டியில் குவிந்தனர்.
அலாகராபுரம், பொட்டலபட்டி, மற்றும் வடக்கம்பட்டி கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.

நிலைமாலை ஊர்வலம்
மாலையில் பொதுமக்கள் திரண்டு பூ, பழம், தேங்காய், பரிவட்டம் அடங்கிய அபிஷேக தட்டுகளை ஏந்தி, நிலைமாலையை எடுத்து கொண்டு மேளதாளம் முழங்க மூன்று கிராமத்தின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலினை அடைந்தனர்.

ஆடு, சேவல் பலி
பூ தட்டு ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமிக்கு பலியிட ஆடுகள் மற்றும் சேவல்களையும் உடன் அழைத்து வந்தனர். தொடர்ந்து முனியாண்டி மற்றும் கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரியாணி படையல்
இதனை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. நள்ளிரவில் சக்தி கிடாய், முதலில் சாமிக்கு பலியிடப்பட்டது.
தொடர்ந்து மண்பானையில் வெண்பொங்கல் வைக்கப்பட்டது.
முனியாண்டி சாமிக்கும், நேர்த்திகடனான கோயிலுக்கு வழங்கிய ஆடுகள், சேவல்கள் வெட்டப்பட்டு அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டு கருப்பணசாமிக்கும் படைக்கப்பட்டது.

பிரியாணி விநியோகம்
இந்தாண்டு 1,500 கிலோ சீரக சம்பா அரிசி, 100 ஆடுகள் மற்றும் 200 சேவல்கள் கொண்டு அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. சாமிக்கு படையலிடப்பட்ட பிரியாணிகள் அதிகாலை முதல் பிரசாதமாக அசைவ பிரியாணி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற வெளியூர்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வடக்கம்பட்டிக்கு வருவது சிறப்பம்சமாகும்.












Click it and Unblock the Notifications