முரசொலி பவள விழா பொதுக் கூட்டம்.. கொட்டும் மழையில் பவள விழ மலர் வெளியீடு
முரசொலியின் 75வது ஆண்டு விழாவின் பொதுக் கூட்டம் கொட்டும் மழையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இதில் பவள விழா மலர் வெளியிடப்பட்டது.
சென்னை: முரசொலியின் 75வது ஆண்டு விழாவின் பொதுக் கூட்டம் கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கத் தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. மழைத் தொடர்ந்து கொட்டியதால் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டு மீண்டும் ஒரு நாள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலியின் பவள விழாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சிபிஐயின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், இந்திய தேசிய லீக் காதர் மொய்தீன், கட்டடத் தொழிலாளர் முன்னேற்றக் கழகம் பொன். குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கொட்டும் மழையில் விழா
விழா தொடங்கிய உடன் திமுகவின் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை வழங்கினார். அவரது பேச்சின் பாதியில் மழை கொட்டத் தொடங்கியது. மேடையில் இருந்த தலைவர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினர். தொண்டர்கள் அனைவரும் நனைந்தபடியே தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மலர் வெளியீடு
மழை வேகமாக கொட்டத் தொடங்கியதால் முரசொலி பவளவிழா மலர் வெளியீட்டு நிகழ்வு உடனடியாக நடத்தப்பட்டது. பவள விழா மலரை மு.க. ஸ்டாலின் வெளியிட சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார். பின்னர், நல்லக்கண்ணு, கி. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு
தொடர்ந்து மழை நிற்காமல் கொட்டியதால், அவசர அவசரமாக மு.க. ஸ்டாலின், பொதுக் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும், மற்றொரு நாள் பவளவிழா பொதுக் கூட்டம் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications