கொலை வழக்கில் லஞ்சம்: இன்ஸ்பெக்டரை சப் இன்ஸ்பெக்டர் ஆக மாற்றிய மதுரை போலீஸ் கமிஷனர்
மதுரை: போலீஸ் சப். இன்ஸ்பெக்டராக இருப்பவருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கொடுப்பது நமக்கு செய்தியில்லை. ஆனால் இன்ஸ்பெக்டராக இருப்பவர் திடீரென சப்.இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்படுவதான் நமக்கு பரபரப்பான செய்தி. அப்படி ஒரு சம்பவம் நேற்று மதுரையில் நடந்துள்ளது. கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் மதுரை கீரைத்துறை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் எஸ்ஐயாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கீரைத்துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சவுந்தரபாண்டியன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை செய்த போது ஒரு கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து விசாரித்துள்ளார். விசாரணையின் முடிவில் உண்மை குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகள் சிலரை குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் இடமாறுதல் கிடைக்கவே மதுரை கீரைத்துறைக்கு வந்து விட்டார்.

இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியனால் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் சமீபத்தில் இந்த வழக்கிலிருந்து விடுதலை ஆகிவிடவே இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. உண்மையான குற்றவாளிகளை தப்பித்துப்போக வைக்க, இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் நாடகமாடி லஞ்சம் பெற்று விட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
காவல்துறை வட்டாரத்தில் இந்த பிரச்னை படிப்படியாக விஸ்வரூபம் எடுக்கவே, இது குறித்த உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு போலீஸ் டி.ஐ.ஜி. அனந்தகுமார் சோமானிக்கு போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனரின் இந்த 'துறை ரீதியான' விசாரணை உத்தரவு ரகசியமாக வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை விசாரணை அறிக்கையை டி.ஐ.ஜி. அனந்தகுமார் சோமானி, கமிஷனரிடம் தாக்கல் செய்தார். அதில், 'இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டு உண்மையே' என்று ரிப்போர்ட் இருந்ததாக கூறப்படுகிறது. அறிக்கையை படித்த உடன் இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியனை அழைத்த கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், "இன்று முதல் நீங்கள் இன்ஸ்பெக்டர் இல்லை... சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுங்கள் பதவி இறக்கம் செய்து உத்தரவிட்டார்.
தமிழக காவல்துறையில் இதுபோல பதவியிறக்கம் செய்யப்படுவது அபூர்வ நிகழ்வாகவே கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பம், அவர் எதிர்காலம் குறித்தெல்லாம் கவலைப்பட்டு சாதாரண 'வார்னிங்-மெமோ' வோடு நிறுத்திக் கொள்வார்கள். பல வருடங்கள் கழித்து இப்படியொரு நடவடிக்கையை உயர் போலீஸ் அதிகாரிகள் எடுத்துள்ளனர். இனி அப்பாவிகளை குற்றவாளிகளாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவது குறையும் என்று மதுரையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications