இறந்ததாக வெளியான போட்டோ; உயிருடன் இருக்கும் பெண் - அதிர்ச்சியில் கோவை போலீஸ்!
கோவை: கோவையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு புகைப்படத்தினை போலீசார் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் டாஸ்கன் நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வீட்டில் வசித்த செல்வராஜ் மாயமானார். செல்வராஜ் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரிந்தது. செல்வராஜை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கொலை நடந்த வீட்டில் பீளமேடு போலீசார் சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு பேக்கில் ஒரு மெமரி கார்டு இருந்தது. அந்த கார்டை போலீசார் கம்ப்யூட்டரில் போட்டு பார்த்த போது ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படத்தை காட்டி அக்கம் பக்கத்தில் போலீசார் விசாரித்த போது இறந்த பெண் போல் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை அச்சடித்து இறந்தது இந்த பெண் தான். இந்த பெண்ணின் பெயர் விபரம் தெரியவில்லை. அது தெரிந்தால் உடனடியாக பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கும்படி மாநகர், புறநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த ஒருவர் கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்டார். பீளமேடு போலீசார் கொலை வழக்கு தொடர்பாக இறந்த பெண் என வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ள பெண் எனது மனைவி. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.
போலீசார் படத்தை மாற்றி வெளியிட்டுள்ளனர் என அவர் ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து மாநகர போலீஸ் உயரதிகாரிகளுக்கும், பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் தொலைபேசியில் பேசிய சென்னை நபரிடம் விசாரித்த போது, இறந்த பெண் என உயிரோடு இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை மாற்றி வெளியிட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபரிடம் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த பெண்ணின் கணவரின் மெமரிகார்டு கோவையில் தொலைந்துள்ளது. அந்த கார்டு செல்வராஜூக்கு கிடைத்துள்ளது. அந்த கார்டை செல்வராஜ் பயன்படுத்திய போதும், அதில் உள்ள புகைப்படங்களை அழிக்கவில்லை.
மேலும், செல்வராஜ் வீட்டில் கிடைத்த அந்த கார்டில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி விசாரித்த போது, அக்கம் பக்கத்தினரும் இறந்த பெண் இவர்தான் என தெரிவித்தனர். அதனால் தான் சற்று குழப்பம் ஏற்பட்டு இறந்த பெண்ணின் படம் என உயிரோடு இருக்கும் பெண்ணின் படம் வெளியாகியுள்ளது. மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. இதையடுத்து இறந்த பெண் யார், தப்பிய செல்வராஜ் எங்குள்ளார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications