கொலைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாத தமிழகம்.. ஒரே நாளில் 3 கொலை!
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற கொலைச் செயல்களால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் இனம்புரியாத அச்சம் நிலவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 3 பேர் 3 ஊர்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே அதிமுக ஊராட்சி மன்றத்தலைவியின் உறவினர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மாதவலாயத்தில் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்த இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவர் போலீசில் சரண் அடைந்தார்.

காஞ்சிபுரம் சோமங்களம் அருகே அமரமேட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காதல் தகராறு காரணமாக மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மேல மருதக்குடியை சேர்ந்தவர் ராஜா.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது அண்ணன் ஸ்டாலின் பா.ம.க மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ராஜா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு பெருமாநல்லூர் என்ற இடத்தில் காளியாட்டம் திருவிழாவை காண காரில் சென்றார். அவருடன் பாலமுருகன் உள்பட 3 பேர் சென்றனர். அவர்கள் திருவிழா பார்த்துவிட்டு சன்னாபுரம் ரயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது காரில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் ராஜாவை கொல்ல ஓடி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ராஜா ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலையை தடுக்க முயன்ற பாலமுருகனையும் முகமூடி கும்பல் தாக்கியது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது.












Click it and Unblock the Notifications