ஆஹா.. முருங்கைக்கு வந்த வாழ்வைப் பாருங்க.. விலை விர்.. மக்கள் கிர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மார்க்கெட்டில் வரத்து இல்லததால் முருங்கை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் மக்கள்தான் மயக்கமாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லசேரி, முடுக்குமிட்டான்பட்டி, நாலாண்டின்புதூர், முப்பன்பட்டி, கசவன்குன்று உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் விளையும் முருங்கை காய்களை விவசாயிகள் பறித்து மொத்தமாக கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது முருங்கைகாய் சீசன் இல்லை என்பதால் வரத்து சொற்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு முருங்கை காய் வரத்து முற்றிலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒன்று, இரண்டு கிலோவாக வருவதால் அவற்றை வாங்க கடும் போட்டி நிலவுவதால் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
முன்பு ஒரு முருங்கை காய் ரூ.5க்கு விற்ற நிலையில் முருங்கை காய் விலை தற்போது கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு வரும் தை மாதம் வரை இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வால் முருங்கை காய் வாங்க வரும் பொது மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.
சரி மக்களே டென்ஷனாகாதீங்க.. இந்த ஜோக்கைப் பாருங்க. ரிலாக்ஸ் ஆகுங்க!