மதுவிலக்கை கொண்டுவரக்கூடிய தகுதி ம.ந.கூட்டணிக்கு மட்டுமே உண்டு: முத்தரசன்
புதுக்கோட்டை: தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவரக்கூடிய தகுதி மக்கள் நலக் கூட்டணிக்கு மட்டுமே உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரை, அறந்தாங்கி தொகுதி சிபிஐ வேட்பாளர் எஸ்.பி.லோகநாதன், புதுக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.ஜாகீர்உசேன், விராலிமலை தொகுதி தேமுதிக வேட்பாளர் கார்த்திக்கேயன், ஆலங்குடி தொகுதி மதிமுக வேட்பாளர் க.சந்திரசேகரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் பிரச்சாரம் செய்ய வரவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள ஆறு கட்சிசிகளின் சார்பில் உங்களிடம் பேசுகிறேன். கடந்த காலங்களில் திமுக, அதிமுகவை நாங்கள் ஆதரித்ததை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் அவர்களோடு அணி சேர்ந்தது தவறு என்று சொல்லமாட்டேன். அவர்கள் நல்லது செய்வார்கள் என்று ஆதரித்தோம். மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், இரண்டு கட்சிகளும் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.
இரண்டு கட்சிகள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் விடுதலை செய்யப்படலாம். ஆனால், அவர்களுக்கான தண்டணையை மக்கள் வாக்குகள் மூலம் தரப்போகிறார்கள். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள். இரண்டு கட்சிகளுமே இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதில் சளைத்தவர்கள் அல்ல. உங்கள் ஊரில் பிறந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இரண்டு கட்சிகளும் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்பது பசப்பு வார்த்தை. பள்ளிக்கூடம் அருகில் இருந்த சாராயக்கடையை அப்புறப்படுத்த கோரி போராடியவர்களை அடித்து நொறுக்கி மண்டையை உடைத்தது ஜெயலலிதாவின் காவல்துறை. மதுவை எதிர்த்து பாடிய கோவனையும், மதுவை எதிர்த்து மாநாடு நடத்தியதற்காக 7 பேரையும் தேச துரோக வழக்கில் கைது செய்தது அதிமுக அரசு.
ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி திட்டத்தை அமுல்படுத்த முடியாமல் அண்ணா திணறிபோது, சாராயக்கடைகளை திறந்தால் நிதி கிடைக்கும் என்றனர் அதிகாரிகள். அதற்கு பிச்சையெடுத்தாலும் சாராயக்கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றார். மதுவிலக்கை கொண்டுவரக்கூடிய தகுதி எங்கள் கூட்டணிக்கு மட்டுமே உண்டு என முத்தரசன் கூறினார்.












Click it and Unblock the Notifications