விவசாயிகளை சந்திக்க மறுத்து நிர்வாணமாக ஓட விடுவதா?- மோடிக்கு முத்தரசன், ஜி.கே. வாசன் கண்டனம்
விவசாயிகளை சந்திக்க மறுத்து அவர்களை நிர்வாணமாக ஓடவிட்ட பிரதமர் மோடிக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் அவர்கள் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போரடியது வேதனைக்குரியது என்று தமிழ் மாநில கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் 7 விவசாயிகள் இன்று நாடாளுமன்றம் முன்பாக ராஜபாதையில் ஆடைகளை அவிழ்த்து விட்டு தரையில் உருண்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயிர் கடன் தள்ளுபடி, உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிர்வாண போராட்டம்
இந்நிலையில் இதன் உச்சகட்டமாக இதுவரை அரை நிர்வாணத்துடன் போராடி வந்த விவசாயிகள், இன்று நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடையத் தயார் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.

முத்தரசன் கண்டனம்
இது குறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை சந்திக்காமல் அவர்களை சுடும் வெயிலில் நிர்வாணமாக ஓட விட்டது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டம் வலுப்பெறும்
பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசி இருக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை விவசாயிகளை சந்திக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய, மாநில அரசுகள் அலட்சியத்தால் விவசாயிகள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

ஜி.கே. வாசன்
நாட்டின் தலைநகரில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியது தலைகுனிவு என்றும் வேதனையாக இருக்கிறது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications