வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முத்தரசன்
மதுரை: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல கூட்டணி சார்பில் மதுரையில் வருகிற 26 ஆம் தேதி மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை பார்வையிட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று மதுரை வந்தார். மாநாட்டு பந்தல் அமைப்பு பணியை அவர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் மாநாட்டு திடலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க. அரசின் கொள்கைகள் திட்டங்கள் தான் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பயன் பெறும் வகையில் அதில் ஒன்றும் இல்லை. மேலும் சட்டசபையில் பேசிய அமைச்சர் நத்தம் விசுவநாதன், தமிழகத்தில் மதுவிலக்கு கிடையாது என்று அறிவித்துள்ளார். இது மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரான கருத்து.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கை கொண்டு வரமாட்டோம் என்ற வகையில் அவர்களது பேச்சு உள்ளது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மது இல்லாத தமிழகம் உருவாக மக்கள் நல கூட்டணி புதிய மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனை மக்கள் வரவேற்று உள்ளனர். மதுரை மாநாடு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications