முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்மூர்த்தி, அதிகாரி செந்தில், உதவியாளர் பூவையா ஆகியோர் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகினர்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி 2014 பிப்ரவரி 20ல் தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிபோனது. அதோடு முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறை அதிகாரியாக இருந்த செந்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மத்திய சிறையில் இருந்தவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கினை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று நெல்லை ஏழாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன. டிசம்பர் 7ம் தேதி மீண்டும் நெல்லை கோர்ட்டில் ஆஜராகும்படி மாஜிஸ்திரேட் ராமலிங்கம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications