முத்துக்குமாரசாமி தற்கொலை: ஹைகோர்ட்டில் செந்தில் ஜாமீன் மனு - 29க்கு ஒத்திவைப்பு
மதுரை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளர் செந்தில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை 29ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நெல்லை வேளாண்மை பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர், கடந்த பிப்ரவரி 20ம்தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர் பதவி மற்றும் அதிமுக கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமை பொறியாளர் செந்திலும் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமைப்பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு, நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த 16ஆம்தேதி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:
வேளாண் துறையில் 7 டிரைவர்கள் நியமனத்திற்கு அமைச்சர் ரூ.11 லட்சம் பணம் கேட்பதாகக் கூறி நான் நிர்ப்பந்தித்ததால் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துள்ளதாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். என் மீதான குற்றசாட்டு பொய்யானவை. பணி நியமனம் செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது.
நான் சென்னையில் பணியாற்றுகிறேன். அவர், நெல்லையில் இறந்துள்ளார். அவரது இறப்புக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான், ஓய்வு பெறும் நிலையில் உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 29ம்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளதால் அவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.