வீரப்பனுக்கு நினைவு மண்டபம்.. கட்டுகிறார் முத்துலட்சுமி
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன். சந்தனக் கடத்தல்காரனாக, காட்டு ராஜாவாக கோலோச்சி வந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்தனர்.

தற்போது ஆண்டு தோறும் அந்த இடத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வீரப்பனின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் அமைக்க திட்டமிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக கர்நாடக போலீசாரால் நான் கைது செய்யப்பட்டதால் அது முடியாமல் போனது. எனினும் விரைவில் எனது கனவை பூர்த்தி செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அனேகமாக வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்திலேயே நினைவிடம் கட்ட முத்துலட்சுமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழக காவல்துறை இதை அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications