பணத்தட்டுப்பாடு.. நெல்லை-தூத்துக்குடியில் மட்டன் கடைகள் வெறிச்! அறுத்து வைத்த ஆடுகள் வீண்
பணத்தட்டுப்பாடு காரணமாக அறுத்து வைத்த ஆடுகளையும் வாங்க ஆளில்லாமல், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில், மட்டன் கடைகள் வெறிச்சோடி கிடந்தன.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பெரும்பாலான மட்டன் கடைகளில் கூட்டம் அறவே இல்லை. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
வழக்கமாக நெல்லை, தூத்துக்குடியில் உள்ள இறைச்சி கடைகளில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மட்டன் கடைகள் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பல கடைகளில் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து ஆடுகளை அறுத்து வைத்திருந்தனர். ஆனால் கூட்டம் இல்லாததால் ஒரு ஆட்டின் இறைச்சி கூட விற்னையாகவில்லை. வருகிற 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறப்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். இதனால் தை மாதம் வரை இறைச்சி வியாபாரம் மேலும் பாதிக்கும் என நினைக்கிறார்கள் வியாபாரிகள்.
இந்நிலையில் தற்போது பண பரிவர்த்தனைக்காக திடீர் புரோக்கர்கள் பண முதலைகளை குறிவைத்து இறங்கியுள்ளனர். 1000க்கு 100 கமிஷன் என்றும், லட்சக்கணக்கில் பணத்தை தனியார் வங்கி, நிதி நிறுவனங்களில் அதிகாரிகளின் உதவியுடன் மாற்று தருகிறோம் என்றும் அதற்கு 10 சதவீத கமிஷன் தர வேண்டும் என்றும் பேரம் வருவதாக கூறப்படுகிறது.