உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் குறுக்கீடு காரணமா?: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தேகம்
சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமோ என்று தாம் சந்தேகிப்பதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் வழக்கில் 7 தமிழரை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியதாவது:

இன்று என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையோடு வந்தேன். ஆனால் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது. என் மகன் நிரபராதி என நிரூபிக்கப்பட்டும் அவனை விடுதலை செய்யாதது வருத்தம் அளிக்கிறது.
இந்த விஷயத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். ஆனால் நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. எங்களது நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

என் மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் நாங்கள் தமிழக முதல்வரை பெரிதும் நம்பியிருக்கிறோம்.
இவ்வாறு அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications