நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும்... ரஜினி அடம்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், அலை என்பது மிகவும் முக்கியம். நானும் ஒரு அரசியல் புதுப்புள்ளி போட்டேன். அது இப்போது யாருக்கும் தெரியாத ஒரு சுழலாக உருவாகி உள்ளத என்றார்
சென்னை: தமிழக அரசியலில் தாம் போட்டிருக்கும் புள்ளி தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும் என்று நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ். காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார் இல. கணேசன். கக்கனின் மறு உருவம் நல்லகண்ணு, குமரி ஆனந்தன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கியுள்ளனர். எப்பவுமே ஒரு அலை வந்தால்தான் எழுச்சி என்பதும் வரும்.
எம்ஜிஆர் நடிப்புத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராவதில் முக்கிய பங்கும் வகித்தார். திமுகவில் கணக்கு கேட்டதற்காக அவரையே தூக்கிப் போட்டார்கள், நான் கணக்கு கேட்டது தப்பா என அவர் கேட்டார்... அனுதாப அலை வீசியது.
1991-ல் காங்கிரஸுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார், அப்போது ராஜீவ்காந்தி படுகொலையால் திமுகவுக்கு எதிரான அலை வீசியது. ஆந்திராவில் என்.டி.ராமராவ் தெலுங்குகாரர் என எழுந்தார். அப்போது அலை வீசியது.
அலை என்பது மிகவும் முக்கியம். நானும் ஒரு அரசியல் புதுப்புள்ளி போட்டேன். அது இப்போது யாருக்கும் தெரியாத ஒரு சுழலாக உருவாகி உள்ளது.மக்கள் மத்தியில் இது வலுவான அலையாக மாற வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் வேண்டும். இந்த அலை தேர்த நேரத்தில் பெரிய அரசியல் சுனாமியாக மாறும்.
அது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது. மக்களாகிய நீங்கள்தான் ஆண்டன்.. அந்த அற்புதம், அதிசயம் நிகழும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் எழுச்சி புரட்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.