'வேந்தர் மூவீஸ்' மதனுக்கு 2 மனைவிகள் மட்டுமே... வேறு கள்ள காதலிகள் இல்லை- தாயார் தங்கம்
வேந்தர் மூவிஸ் மதனுக்கு இரண்டு மனைவிகள் மட்டுமே இருக்கின்றனர் வேறு காதலிகள் யாரும் கிடையாது என்று அவரது தாயார் தங்கம் கூறியுள்ளார்.
சென்னை: எஸ்ஆர்எம் நிறுவனத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக உயிருக்கு பயந்துதான் மதன் தலைமறைவானார் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதனின் தாயார் தங்கம், அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
வேந்தர் மூவிஸ் மதன் 6 மாத கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். அவர் பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
திருப்பூரைச் சேர்ந்த வர்ஷாவை 3வதாக மதன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனை மதனின் தாயாரும், அவரது இரண்டாவது மனைவியும் மறுத்துள்ளனர்.
மதனின் தாயார் பேட்டி
மதனின் தாயார் தங்கம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், கல்லூரிகளுக்கு நன்கொடை வாங்கி கொடுப்பதுதான் மதனின் வேலை என்றார். மேலும் நன்கொடை வசூலிக்க எஸ்.ஆர்.எம். தலைவர் பச்சமுத்து ஊக்கம் அளித்தார். நன்கொடை வசூலித்ததில் முதல் குற்றவாளி பச்சமுத்துதான் என மதன் தாய் குற்றம் சாட்டினார்.
மதன் செய்தது நியாயம் இல்லை
கல்வியை வியாபாரம் ஆக்கியது நியாயமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மதன் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் பல கல்லூரிகளில் இதுபோல் நன்கொடை வசூலிப்பது தெரியும் எனவும் தங்கம் கூறினார்.
மதன் பலிகடா
கல்லூரி நிர்வாகத்தில் பச்சமுத்துவிற்கும் ரவி பச்சமுத்துவிற்கும் பிரச்சினை ஏற்பட்டது. பச்சமுத்துவின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மதனை பலிகடா ஆக்குகிறார்கள். உயிருக்கு பயந்தே மதன் தலைமறைவானார் என்றும் கூறினார்.
இரண்டு மனைவிகள்தான்
மதனுக்கு மனைவியை தவிர வேறு பெண்களுடன் தொடர்பு இல்லை எனவும் அவர் கூறினார். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், இதன் காரணமாகவே இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்கம் தெரிவித்தார்.
பணம் படுத்திய பாடு
உயிருக்கு பயந்துதான் மதன் தலைமறைவானதாகவும் தங்கம் தெரிவித்தார். வயதான பெற்றோர்களையும், மனைவி குழந்தைகளை காப்பற்றவுமே தனது மகன் பாடுபட்டார் என்றும், அவர் முறைகேடாக சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் மதனின் தாயார் தங்கம் கூறியுள்ளார்.