சென்னை ஹைகோர்ட்டில் பீதி கிளப்பிய மர்ம பொருள் : வெடிகுண்டு இல்லை...டைம்பீஸ் தான்!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கழிவறை அருகே மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பொருளை சோதனை செய்து பார்த்தபோது அது வெடிகுண்டு அல்ல வெறும் டைம்பீஸ் சாதனம்தான் என்பது தெரியவந்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் பேட்டி எடுக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அருகே வழக்கறிஞர்களுக்குத் தனியாகவும், பொது மக்கள் பயன்பாட்டுக்கு என 2 கழிவறைகள் உள்ளன. இன்று காலை பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் வெள்ளை நிற துணியில் சுற்றப்பட்ட மர்ம பொட்டலம் ஒன்று கிடந்தது. அதில் இருந்து 11 மணியளவில் பீப் பீப் என்ற அலார சத்தம் வெளியானது. அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அது வெடிகுண்டு பார்சலாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். அருகில் செல்லவே பயந்தனர். இச்செய்தி உயர்நீதிமன்றம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. வழக்கறிஞர்களும், போலீசாரும் அங்கு திரண்டனர். பார்சல் அருகே யாரையும் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஹீரோ என்ற போலீஸ் மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்தனர். கழிவறையில் கிடந்த மர்ம பொருள் அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே வைத்து அதை வெடிகுண்டு நிபுணர்கள் ‘மெட்டல் டிடெக்டர்' கருவி உதவியுடன் சோதனை செய்தனர். அதன் உள்ளே வெடிகுண்டு எதவும் இல்லை என உறுதி செய்தனர்.
வெள்ளை துணியால் சுற்றப்பட்டிருந்த பார்சல் பிரிக்கப்பட்டது. உள்ளே 2 அலார வகை கடிகாரங்கள் இருந்தன. அந்த பார்சலுடன் 2 பக்கம் கடிதம் இருந்தது. அதில் அரசு உயர் அதிகாரிகள் எல்லாம் அதிக அளவில் லஞ்சம் வாங்குகின்றனர். அந்த அதிகாரிகளை எல்லாம் மர்ம கேமிரா மூலம் படம் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தின் இறுதியில் இப்படிக்கு மக்கள் செய்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பார்சலை வைத்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் வழக்கறிஞர்கள் போராட்டம், குற்றவாளிகள் என பரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலால் காலை நேரத்தில் சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications