வைகோவை தாக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர்.. மீட்டு சென்ற மதிமுக தொண்டர்கள்!
சீமான் குறித்து பேசியதற்காக வைகோ மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள்.
Recommended Video
மதுரை: சீமான் குறித்து பேசியதற்காக வைகோ மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிர்நீத்த 16 பேரின் நினைவிடம் உள்ளது. 16 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு வைகோ மரியாதை செலுத்தச் சென்றார்.
அப்போது அங்கு நாம் தமிழர் கட்சியினரும் அதிக அளவில் கூடி இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய வைகோ, தான் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்றும் அப்பாவி இளைஞர்களை சிலர் உசுப்பேற்றி விடுவதாக சீமான் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
இதனை நம்பி தன்னை தெலுங்கன் என்று சமூக வலைதளங்களில் ஒரு கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாகவும் வைகோ பேசினார். தொடர்ந்து அந்த கட்சியினர் தனது ஜாதியை கூறி, தன்னை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கையை வெளியே கூடியிருக்கும் கட்சியினருக்கு தான் விடுப்பதாகவும் வைகோ வெளிப்படையாக கூறினார். வைகோவின் பேச்சை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி உள்ளே நுழைய முயன்றனர்.
உடனடியாக போலீசார் வைகோவை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் அவர் புறப்பட்டார். வைகோ வெளியே செல்லும் போது திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வைகோ அருகே நெருங்கி அவரை தாக்க முயற்சி செய்தார்கள்.
அவர்களுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள் வைகோவை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மதிமுக தொண்டர்களையும், நாம் தமிழர் கட்சியினரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.