கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் அமைப்புகள் சத்தியமூர்த்தி பவன் முற்றுகை!
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சொன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கருத்து கூறிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து பல்வேறு நாடார் அமைப்புகள் சார்பில் இன்று சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து நாடார் அமைப்புகள் ஏற்கனவே சென்னையில் அவரது வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி இருந்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இதுவரை கார்த்தி சிதம்பரம் மீது கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாததால் நாடார் அமைப்புகள் மீண்டும் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகில் இன்று போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை தாங்கினார். நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

இதில் சத்திரிய நாடார் இயக்க மாநில கூடுதல் பொதுச் செயலாளர் மாரித்தங்கம், வடசென்னை மாவட்ட தலைவர் எட்டுராஜ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மாரியப்பன், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் மின்னல் ஸ்டீபன், நாடார் எழுச்சி பேரவை தலைவர் வக்கீல் சுரண்டை சின்னத்தம்பி, நாடார் டுடே பாலமுருகன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், வேளச்சேரி பிரதாப் சுந்தர், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, சிவராஜன், பரமசிவம் உள்பட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
இருப்பினும் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அடுத்த கட்டகமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து புகார் மனு தரப் போவதாக அமைப்பினர் கூறினர்.












Click it and Unblock the Notifications