மழை வெள்ள பாதிப்பு.. நடிகர் சங்கமும் உதவி!
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது நடிகர் சங்கத்தின் வேலை இல்லை என்று நடிகர் விஷால் கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் கடும் கொதிப்பும், எதிர்ப்பும் கிளம்பியதைத் தொடர்ந்து அப்படியெல்லாம் யாரும் கூறவில்லை. நாங்கள் உதவி செய்கிறோம் என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒ ன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது, அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரோ பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக தெரியவந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல், நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முதற்கட்ட பணியாக சிலஉதவிகளை மேற்கொண்டுள்ளது. அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் புழங்குவதற்கு தேவையான பாய், படுக்கை விரிப்பு போன்றவைகளும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து எஸ்.வி.சேகர், பூச்சிமுருகன், மனோபாலா மற்றும் ரோகிணி ஆகியோர் உதவியுள்ளனர். மேலும், நடிகர் அருள்நிதி 1,000 படுக்கை விரிப்புகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக சங்கத்தைச் சேர்ந்த குட்டிபத்மினி, கோவைசரளா, லலிதாகுமாரி, சோனியா, மனோபாலா, பசுபதி, உதயா, ஹேமச்சந்திரன், அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் பாடுபட்டுள்ளனர்.
மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அயுப்கான் மற்றும் ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.