கணக்கு வழக்கு பிரச்சினை... சரத், ராதாரவி மீது போலீசில் புகார் செய்கிறது நடிகர் சங்கம்!
சென்னை: நடிகர் சங்க கணக்குகளை முறைப்படி ஒப்படைக்காதது குறித்து சரத்குமார் மற்றும் ராதாரவி மீது குற்றப் பிரிவு போலீசில் புகார் தரப்போவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 99-வது பிறந்தநாளான நேற்று அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்து 4-வது செயற்குழு கூட்டம் 2011-க்கு பிறகு முதல்முறையாக நடிகர் சங்க வளாகத்திலேயே தலைவர் நாசர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்ற நிர்வாகத்தின்போது எஸ்பிஐ சினிமாஸுக்கும், நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கும் இடையே போடப்பட்ட எல்லா வகை ஒப்பந்த்தங்களையும் முழுவதுமாய் ரத்து செய்யும் அறக்கட்டளையின் முடிவை தென்னிந்திய நடிகர் செயற்குழு ஏகமனதாய் ஏற்றுக்கொண்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2014 - 2015 ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-2014, 2014-2015 ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு மூன்று மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்பிக்காததால் சென்ற நிர்வாகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மீது பொருளாதார குற்றப் பிரிவிடம் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குரு தட்சணை திட்டம் என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணைத்தலைவர் பொன்வண்ணன், அதை வெற்றிகரமாய் செயல்படுத்திய கோவை சரளா, பசுபதி, ரமணா, உதயா, பூச்சிமுருகன், விக்னேஷ், நந்தா, பிரேம், ஹேமச்சந்திரன், மனோபாலா, ஜுனியர் பாலையா, ராதா ஆகியோரை செயற்குழு பாராட்டியும், வாழ்த்தியும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஏற்கனவே, துணைத் தலைவர் கருணாஸ் பொருப்பில் ஏற்படுத்தப்பட்ட ஏஆர்ஓ-க்கள் சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் மேலும் நெறிப்படுத்த சிவகாமி, குட்டிப்பத்மினி, லலிதாகுமாரி, உதயா, பிரேம், மருதுபாண்டி, விக்னேஷ் கொண்ட உபகுழு அமைக்கப்படுகின்றது என்று செயற்குழுவிற்கு தெரிவிக்கப்படுகிறது.
சென்ற மாதத்திற்கான சங்கம், அறக்கட்டளை வரவு செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்தி சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன் நன்றி கூற செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications