இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்ன சொல்கிறார்கள் நடிகர் சங்கத்தினர்?
சென்னை: இந்தத் தேர்தலில் நடிகர் சங்கம் யாருக்கும் சாதகமாக செயல்படாது. யார் வென்றாலும் அவர்களுக்கு ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளனர் அதன் நிர்வாகிகள்.
நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள். அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், இந்தத் தேர்தலில் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாசர், "நடிகர் சங்கம் அரசியல் சார்பற்றது. அனைத்து கட்சியினருக்கும் பொதுவானது.
எங்களுக்கு அனைவருமே வேண்டும். யார் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம். பிரச்சாரம் பண்ணலாம்.
ஆனால் 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும். எனவே அனைவரும் வாக்களியுங்கள்," என்றார்.
நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிராக நின்ற கருணாசும் சரத்குமாரும் இந்தத் தேர்தலில் ஒரே அணியில் நிற்கிறார்களே, என்று கேட்டதற்கு, "இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதென்று. அன்று சங்கத்தின் தேர்தலுக்காகத்தான் அணிகளாகப் பிரிந்து நின்றோம். தேர்தல் முடிந்ததும் எல்லோரும் ஒரே அணி ஆகிவிட்டோம்," என்றார்.